அரசியல் சண்டைக்கு நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்: கட்சி நிர்வாகிகளுக்கு நீதிபதி அறிவுரை
அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றங்களை பயன்படுத்தாதீர் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியது.
நாகர்கோவில் வடசேரியில் நெடுஞ்சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மணற்சிற்பத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அதனை அகற்றக் கோரி திமுக நகர செயலாளர் மகேஷ் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். விசாரணையில் அதிமுக நிர்வாகி விஜயகுமார் ஜெயலலிதாவின் மணற்சிற்பத்திற்கு அருகிலேயே அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் உள்ளன என்றும், அதில் அண்ணா சிலையை பராமரிப்பது தற்போது வழக்குத் தொடர்ந்துள்ள மகேஷ்தான் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதனைத்தொடர்ந்து நீபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அமர்வு அரசியல் சண்டைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என்று மனுதாரர்கள் இருவரிடமும் தெரிவித்தனர். பொதுநலனுக்கானது என்றால் போக்குவரத்துக்கு இடையூறாக நெடுஞ்சாலையின் நடுவே உள்ள அனைத்து சிலைகளையும் அகற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.