
நெல்லை மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் திமுக போட்டியிடுகிறது.
1996 தேர்தல் வரையிலும் காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வந்த தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இதற்கு முன்பு
கடந்த 1991-ம் ஆண்டு தி.மு.க. சார்பாக சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. போட்டியிடவில்லை, தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்தது. தி.மு.க. கூட்டணி சார்பாக புதிய தமிழக கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரும் போட்டியிட்டுள்ளனர். இதில் தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தென்காசி திமுக வேட்பாளராக தனுஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி 1991-க்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரடையாக போட்டியிடுகிறது.
இதுவரை நேரிடையாக தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறாததால், இந்த முறை எப்படியும் வெற்றி பெற தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. மேலும் இதுவரை கூட்டணி கட்சிகளுக்காகவே உழைத்த திமுகவினர் தற்போது நேரடியாக தங்கள் கட்சி போட்டியிடுவதால் குதூகலமடைந்துள்ளனர்.