“தேமுதிகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை” - ஸ்டாலின்
தேமுதிகவுடன் கூட்டணி குறித்த எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். விஜயகாந்துடன் தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆனால் அதிமுக - தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. விஜயகாந்தை சந்தித்த பிறகு பியூஷ்கோயல் கூட்டணி குறித்த அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
இதையடுத்து தேமுதிக பாஜகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இன்று மதியம் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயலுடன் தேமுதிக செயலாளர் சுதீஷ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.