ஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை
ஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விசாரணை முறையாக நடப்பதற்கு ஏதுவாக, குற்றச்சாட்டுக்கு ஆளான ஐஜி-யை, லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விசாரணையில் நம்பிக்கை ஏற்பட, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐஜி இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், விசாரணை நியாயமாக நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது என குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் சிபிசிஐடி காவல்துறை வருவதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.