பேச்சுவார்த்தையை நிறுத்திய திமுக - அதிமுகவை நெருங்குகிறதா தேமுதிக?

பேச்சுவார்த்தையை நிறுத்திய திமுக - அதிமுகவை நெருங்குகிறதா தேமுதிக?
பேச்சுவார்த்தையை நிறுத்திய திமுக - அதிமுகவை நெருங்குகிறதா தேமுதிக?

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை திமுக நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடுபிடிக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை :

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அரசியல் நிலவரம் சூடிபிடித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி முடிவுகள் பரபரப்புடன் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தங்களது கூட்டணியை கிட்டதட்ட உறுதியாக்கிவிட்டன.

ஆனால், தமி‌‌‌‌ழ‌கத்தின்‌ மு‌க்கிய கட்சியா‌‌ன தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை வெளியிடா‌மல் இருப்பதுதான், திமுக, அதிமுக கூட்டணி ஒரு முடிவுக்கு வராமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ‌அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதாகதான் முதலில் தீவிர பேச்சு நடைபெற்று வந்தது. ஆனால், அதில் இழுபறி நிலை நீடித்து வந்தது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விஜயகாந்த் வீட்டிற்கே சென்று நேரடியாக பேசினார். 

ஆனால், தேமுதிக தலைவர் விஜய்காந்தை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தது முதல் திருப்பம் ஏற்பட்டது. விஜயகாந்தை சந்தித்த பின்னர் பேசிய திருநாவுக்கரசர், இரு அரசியல் தலைவர்கள் சந்தித்திருக்கிறோம் எப்படி அரசியல் பேசாமல் இருக்க முடியும் என்று பொடி வைத்து பேசினார். அதோடு, கூட்டணி விவகாரத்தில் நல்ல முடிவு எடுங்கள் என்று வலியுறுத்தியதாக கூறினார்.

திருப்பு முனையான ஸ்டாலின் சந்திப்பு :

இதனையடுத்து, எதிர்பாராத விதமாக திமுக தலைவர் ஸ்டாலின், விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். நலம் விசாரிக்கவே வந்ததாக அவர் கூறினார். ஆனால், அதோடு அந்த பேட்டி முடியவில்லை. திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி என்று ஸ்டாலின் பதில் அளித்தது எல்லோரையும் யோசிக்க வைத்தது. 

இதெற்கெல்லாம் தெளிவு ஏற்படுத்தும் வகையில், ஸ்டாலின் சந்திப்பின் போது அரசியல் பேசப்பட்டதாக பிரமேலதா போட்டுடைத்தார். இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கவுரமான தொகுதிகள் கிடைக்கும் அணியில் இடம்பெறுவோம் என்று அவர் கூறினார். மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதிருப்தியில் அதிமுக :

தேமுதிக திமுகவுடன் பேசிவருவதாக வெளிப்படையாக தெரிவித்தது அதிமுகவுக்கு சற்றே சங்கடத்தை ஏற்படுத்தியது. தேமுதிக வந்தால் சேர்த்துக் கொள்வோம், வராவிட்டாலும் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதேபோல், அமைச்சர்கள் சிலரும் தேமுதிகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். இதனால், திமுக பக்கம் தேமுதிக நெருங்கிவிட்டதாக பேசப்பட்டது. 

தேமுதிக தங்கள் கூட்டணியில் இடம்பிடித்துவிட்டால் வடமாவட்டங்களில் பாமக - அதிமுகவை எதிர்க்க பலமாக இருக்கும் என்று திமுக கணக்கு போட்டதாக கூறப்பட்டது. ஆனால், தேமுதிக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தரப்பினரும் தெரிவித்து வந்தனர். அதனால், தேமுதிக எந்த பக்கம் சாயப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  

இதுஒருபுறம் இருக்க, மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்பமனுக்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு நோ சொன்ன திமுக :

இந்நிலையில், தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை திமுக நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 நாடாளுமன்ற தொகுதிகளுடன், இடைத்தேர்தலில் சில இடங்களில் போட்டியிடுவதற்காக தேமுதிக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், 21 தொகுதிகளை திமுக விட்டுக் கொடுக்க தயாராக இல்லாததால் இழுபறி நீடித்தது. இந்த சூழலில் இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கருதப்பட்ட தேமுதிக, மீண்டும் அதிமுகவுடன் பேசுவதாக கூறப்படுகிறது. அதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 6ம் தேதி தமிழகம் வருவதற்குள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. அதனால், சில தினங்களில் அதிமுக கூட்டணி உறுதியாகிவிடும்.

அமமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போனது :

விஜயகாந்தை மத்திய அமைச்சர், திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் ஆகியோர் சந்தித்துவிட்டு சென்ற பின்னர், தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜயகாந்த் மகன் பிரபாகரன், அனைத்து கட்சியினரும் கூட்டணிக்காக காலில் விழுவதாக பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விஜயகாந்த் மகன் முதிர்ச்சி அற்று பேசுவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் யார் வந்து காலில் விழுந்தது என்பதை பிரபாகரன் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், இதற்கு மேலும் விஜய்காந்த் வீட்டிற்கு போய் கூட்டணி குறித்து எந்தக் கட்சியினராவது பேசினால், அது வெட்கக்கேடு எனவும் குறிப்பிட்டார். இதனால் அமமுக-தேமுதிக கூட்டணி என்பதற்கு வாய்ப்பில்லாமல் போனது.

முடிவுக்கு வருகிறதா கூட்டணி பேச்சுவார்த்தை? 

தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, இடதுசாரிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, தேமுதிக இல்லை என்பதால் மற்ற தோழமை கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை திமுக விரைவில் நிறைவு செய்யும். ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதியை திமுக ஒதுக்கி இருந்தது. நாளை ஸ்டாலின் பிறந்தநாள் வருவதால், மார்ச் 2க்கு பிறகு, சில தினங்களில் திமுக தனது கூட்டணியை இறுதி செய்துவிடும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com