திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசிக மாநில செயலாளரும், விசிக சமூக ஊடகத்தைக் கவனித்து வரும் சஜான் பராஜ் முகநூலில் வெளியிட்ட பதிவில், “தொடர் பயணங்களால் உடல் ஒவ்வாமை காரணமாக அப்போலோ மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் ஒய்வு எடுத்தால் மட்டும் போதும் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால் ஐந்தாம் தேதி வரை தலைவரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. தேவையற்ற வதந்திகளை முகநூலில் பரப்பவேண்டாம்” என்று தெரிவித்து இருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமாவளவனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.