“அழகிரியை சேர்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி” : ஆதரவாளர்கள்
திண்டுக்கல் மாவட்ட ஆதரவாளர்கள் மு.க அழகிரியுடன் ஆலோசனை நடத்திய பின் அவரது ஆதரவாளர்கள் பேட்டியளித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைந்த பிறகு அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்பதற்கு முன்பே திமுகவில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தினார். தன்னை திமுகவில் சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இதனைதொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் வகையில் ஆதரவாளர்களுடன் அமைதிப் பேரணியை மு.க.அழகிரி நடத்தினார். அதில் ஏராளமான அழகிரியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் திமுகாவில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இதனையெடுத்து தனது ஆதரவாளர்களை மதுரையில் அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் மு.க அழகிரி திண்டுக்கல் மாவட்ட ஆதாரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்க்கு வந்த அனைவரிடமும் ஆலோசனை செய்து கருத்துகளை கேட்டறிந்தார் அழகிரி. இந்த ஆலோசனை கூட்டம் ஒரு மணிநேரம் நடைபெற்றது. பின் வெளியே வந்து பேசிய மு.க அழகிரியின் ஆதரவாளர்கள் “அழகிரியை கட்சியில் சேர்த்தால் மட்டுமே திமுக வெற்றி பெறும், மு.க அழகிரிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருவதாகவும், அழகிரியை கட்சியில் சேர்ந்தால் தான் உதயச்சூரியன் உதிக்கும்” என தெரிவித்தனர்.