“தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் டிடிவி தினகரன் ” - திவாகரன்
தொண்டர்களின் நம்பிக்கையை டிடிவி தினகரன் இழந்துவிட்டதாக அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கஜா புயலுக்குப் பிறகு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. தண்ணீர் பிரச்னை வந்த பிறகு யாகம், தெய்வ வழிபாடு நடத்துவதை விட்டு எப்போதுமே தெய்வ வழிபாடு இருந்தால் இது போன்ற நிலை ஏற்படாது.
தமிழகத்தில் நீட் தேர்வும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் பிரச்னையாக உள்ளது. அரசு இவற்றை எதிர்ப்பதாக கூறுகிறது. ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்கின்றனர். இது அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. மக்கள் பிரச்னைகளை அரசு தட்டிக் கழிப்பது தான் பிரச்னையாக உள்ளது. எதிர்க் கட்சியினரும் ஆளுங்கட்சியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் அரசியல் செய்யாமல் ஒன்று சேர்ந்து தமிழக விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் அதற்கு அண்ணா திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கும். தமிழக அமைச்சர்கள் எந்த குறிப்பும் இல்லாமல் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பேசுகின்றனர். இது தவறு. அதிமுகவும் அரசும் கட்டுக்கோப்பாக இல்லை. அரசு செயல்படுகிறதா என்பது சந்தேகமாக உள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளம், குட்டைகளை மீட்டெடுத்து தண்ணீரை சேமிக்கும் வழியை செயல்படுத்த வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டுமென ஒருங்கிணைப்பாளர்கள் பத்திரிக்கைகளில் மட்டும் தான் சொல்கிறார்கள். அதற்கான ஆக்க பூர்வ முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்த பிறகும் அதை அவர்கள் உணரவில்லை.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற இயக்கங்கள் ஒன்று சேர முயற்சி நடைபெற்றால் அதற்கு அண்ணா திராவிடர் கழகம் தடையாக இருக்காது. குட்டையை குழப்பி அண்ணா திமுகவை தினகரன் வீணடித்து விட்டார். அரசை கவிழ்த்து விடுவதாக கூறி தொண்டர்களை நம்பிக்கை இழக்க வைத்து உள்ளார். தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்