தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வரும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
தினகரன் அணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் நேற்று சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்த நிலையில், மற்ற 18 எம்.எல்.ஏக்களுக்கு மூன்றாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த 22 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
இதுதொடர்பாக உரிய விளக்கம் கேட்டு ஏற்கனவே 2 முறை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு விளக்கம் அளிக்க 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என கடந்த 5 ஆம் தேதி சட்டப்பேரவை செயலரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், வரும் 14 ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.