இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபருக்கு தர்மஅடி... சிறையில் அடைப்பு...
பெண் குளித்துக் கொண்டிருந்ததை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த கட்டட தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை குரோம்பேட்டை நாகல்கேணி, சரஸ்வதிபுரத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் குளித்துக் கொண்டிருந்தபோது, யாரோ ஒரு மர்ம நபர் குளியலறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். இதனை கண்ட இளம்பெண் அங்கிருந்து ஓடிச் சென்று தனது கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
அவரது கணவர் தேடிச் சென்று விசாரித்ததில் மனைவி குளிக்கும்போது எட்டிப் பார்த்தது அருகில் கட்டட வேலை செய்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்தது. அவரை பிடித்து, பொது மக்களோடு சேர்ந்து தர்மஅடி கொடுத்து சங்கர் நகர் போலீசாரை வரவழைத்து மூர்த்தியை ஒப்படைத்தனர்.
சங்கர் நகர் போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெண் குளிக்கும் போது பார்த்ததை ஒப்புக் கொண்டார். அதனடிப்படையில் அவர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். செம்படம்பர் 4ம் தேதி வரை சைதாப்பேட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.