இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமினில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் தினகரன் பெயர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் போலீசார் தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச்சட்டப்பிரிவின் கீழ் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.