பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ
Published on

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனில் பஜ்பாய் பாஜகவில் இணைந்துள்ளார். 

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 66 எம்.எல்.ஏக்களுடன் மெஜாரிட்டி அரசாக ஆம் ஆத்மி அரசு திகழ்கிறது. நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட கூட்டணி வைக்க தயார் என்று தெரிவித்தது.

இதற்கிடையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவருக்கு ரூ10 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாக டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான சிசோடியா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் காந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அனில் பஜ்பாய் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக துணை தலைவரும் டெல்லி பாஜக பொறுப்பாளருமான ஷியாம் ஜஜு மற்றும் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த இணைப்பு நடைபெற்றது. மேலும், மூன்று நகராட்சி ஆம் ஆத்மி கவுன்சிலர்களும் இந்நிகழ்ச்சியின் போது  பாஜகவில் இணைந்தனர்.

“ஆம் ஆத்மி கட்சிக்காக நான் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். அங்கு எனக்கு உரிய மரியாதை இல்லை. விசித்திரமான வகையில் கட்சி செயல்படுகிறது. தன்னுடைய உண்மையான பாதையில் இருந்து கட்சி விலகிவிட்டது” என்று எம்.எல்.ஏ பஜ்பாய் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com