கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனப் பேசிய கமலுக்கு எதிராக, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
கமலின் நாக்கினை அறுக்க வேண்டும் எனும் அளவிற்கு அவர் காட்டமாக பேசினார். தேசிய அளவிலும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கமலின் பேச்சினை கண்டித்தார். பாஜக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திக உள்ளிட்டோர் கமலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனப் பேசிய கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கமல்ஹாசன் மீதான வழக்கை மே 16 இல் விசாரிப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

