2 ஜி விவகாரத்தில் காங்கிரஸ், திமுக ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி வந்த பாஜக, தற்போது மன்னிப்பு கேட்குமா?’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவிப்பதாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தலைமுறையிடம் பேசிய குஷ்பு, “தீர்ப்பு வெளியாகியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வழக்கில் பொய் குற்றச்சாட்டுகள்தான் ஆரம்பம் முதலே இருந்தது. தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாஜக மன்னிப்பு கோருமா? எனத் தெரியவில்லை. ஏனென்றால் 2014ஆம் ஆண்டு 2ஜி ஊழல் என்று கூறிதான் பாஜக ஆட்சியை பிடித்தது. அத்துடன் போஸ்டர்கள் உட்பட அனைத்து பிரச்சாரங்களிலும் காங்கிரஸும், திமுகவும் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக கூறினர். ஆனால் தற்போது அனைவரும் விடுதலையாகியுள்ளதால் பாஜக சார்பில் மன்னிப்பு கேட்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.