ஜெயலலிதா அரசியல் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை என்றும், உழைப்பால் யார் வேண்டுமானாலும் அ.தி.மு.வில் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழா நடைபெறவிருந்த மேடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விழாவின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க தான் காரணம் என்றார். அத்துடன் இந்தியாவிலேயே முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசியல் வாரிசு யாரும் இல்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி மற்றும் பதவியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஜெயலலிதா தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார். பின்னர் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமியையும், தன்னையும் தற்போது சில எம்.எல்.ஏக்கள் பதவி விலகுமாறு தெரிவிப்பதற்கு காரணம், ஒரு குடும்ப ஆட்சி வேண்டாமென்று தான் கூறியதுதான் என்றும் தெரிவித்தார்.