அதிமுக-தீபா ஆதரவாளர்களிடையே மோதல்: கைகலப்பு நிலவியதால் பரபரப்பு
சென்னை ஆர்.கே.நகரில் தீபாவின் ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினக்கும் மோதல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுவில் சொத்துகள், வழக்குகள் குறித்து தெரிவிப்பதற்கான படிவம்-26 முழுமையாக நிரப்பப்படாமல் இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தீபாவின் ஆதரவாளர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்றிரவு திரண்டனர். தீபாவும் அங்கே வந்தார். அந்த சமயத்தில் தீபா குறித்து தவறாக பேசப்பட்டதாகவும், அதற்காக தீபா பேரவையினர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் குறித்து தவறாக பேசியதாகவும் மாறி மாறி புகார்கள் கூறப்பட்டன. இதனால் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவியது. அப்போது தீபா பேரவையின் ஆதரவாளர் ஒருவரை பல பேர் சேர்ந்து கடுமையாக தாக்கினர். அந்த நபரை அங்கிருந்து மீட்ட காவல்துறையினர் நகர்ந்து போகுமாறு செய்தனர். இதனையடுத்து நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையில் அங்கு வந்த தீபா சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றார்.