சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம்குழந்தைகள் தனிச்சிறப்பு பிரிவில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தற்காலிக முறை கருத்தடை ஊசி அறிமுக விழா எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையின் 5வது தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை தர இருந்த நிலையில், அங்கு திடீரென மின்சாரம் தடைபட்டது. விழா அரங்கம் உள்ள அந்த தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தனிச்சிறப்பு மையம் செயல்படுவதால் பொதுமக்களும், குழந்தைகளும் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதையடுத்து மின் விநியோகத்தை சீரமைக்க முடியாததால் நிகழ்ச்சி வேறொரு அரங்கிற்கு மாற்றப்பட்டது.