பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர்கள் இன்று மக்களவை தேர்தலில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மக்களவை தேர்தலில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்துகின்றனர்.
நேற்றைய தினம் இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் தமிழகத்தில் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.