சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் நாளை மோதல் - முத்திரை பதிக்கப் போவது தோனி படையா? ரோகித் படையா?

சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் நாளை மோதல் - முத்திரை பதிக்கப் போவது தோனி படையா? ரோகித் படையா?
சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் நாளை மோதல் - முத்திரை பதிக்கப் போவது தோனி படையா? ரோகித் படையா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எல் கிளாசிகோ போட்டி என்றழைக்கப்படும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான பலப்பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. TWENTY TWENTY கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையிலான போட்டி தலைநகரில் அரங்கேறவுள்ளது.

கிரிக்கெட் உலகில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டிகள், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இவற்றிற்கு நிகரான எதிர்பார்ப்புகளைக் கொண்ட போட்டி என்றால் ஐபிஎல்லில் சென்னை மும்பை அணிகள் இடையிலான போட்டியே. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய ஆண்டு முதல் இன்று வரை இவ்விரு அணிகள் மோதிக் கொள்ளும் போது களத்தில் இருக்கும் அதே அனல், சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கிடையிலும் இருக்கும். லலீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா- ரியல் மேட்ரிட் இடையிலான போட்டி எல் கிளாசிகோ என்றால் ஐபிஎல்லின் எல் கிளாசிகோ சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை தான்.

அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி என்றால், அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்றது சென்னை அணியாக உள்ளது. ஆனால் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அதிக முறை வெற்றிக்கனியை பறித்தது மும்பை அணியே. இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் மும்பை அணி 19 முறையும், சிஎஸ்கே 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கிரிக்கெட்டில் அன்றைய தினமே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பலமுறை உணர முடிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியே அதற்கு சான்று. கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை இவ்விரு அணிகளுக்கிடையே மட்டுமே தவழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 4 சீசன்களில் 3 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

கடந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்துக் கொண்ட முதல் போட்டியில் சென்னை அணி சாம் கரணின் இறுதிநேர அதிரடிகளால் வெற்றி பெற, இரண்டாவது சந்திப்பில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழி தீர்த்தது மும்பை இந்தியன்ஸ். நடப்பு சீசனில் இரு அணிகளும் வெற்றி பாதையில் உள்ளதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சம் பெற்றுள்ளது. இவ்விரு அணிகளிடையேயான போட்டி என்பது ஃபார்மைப் பொறுத்தது மட்டுமல்ல; போட்டி தின மன நிலையையும் பொறுத்ததே.

மற்ற அணிகளின் ரசிகர்கள் பிளே ஆஃப்க்கான முனைப்பில் இருந்தால், சென்னை மும்பை அணி ரசிகர்களுக்கு கோப்பை வெல்வது மட்டுமே எதிர்பார்ப்பாக இருக்கும். ஹாட்ரிக் சாம்பியன்ஸ் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு சென்னை அணிக்கு 2012 ஆம் ஆண்டு இருந்ததைப் போல, மும்பை அணிக்கு இந்த வருடம் உள்ளது. ரசிகர்களின் கனவை நனவாக்கும் விதமாக ரோகித்தின் படை ஹாட்ரிக் கோப்பையை வசப்படுத்துமா? கடந்த சீசன் காயங்களுக்கு மருந்தாக கோப்பையை பற்றிச் செல்லுமா தோனியின் படை? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

-பிரவீண்குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com