பொது சின்னம் கோரும் ஐஜேகே வழக்கு: இன்றைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவு
பொது சின்னம் தொடர்பாக இந்திய ஜனநாயக கட்சியின் விண்ணப்பத்தை இன்றைக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், பொது சின்னம் கோரிய விண்ணப்பத்தில் அத்தாட்சி பெற்ற நபர் என யாரையும் குறிப்பிடவில்லை எனவும், பொது சின்னம் ஒதுக்குவதற்கான தேதி முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு ஐஜேகே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். தங்களது மனுவை முறையாக பரிசீலித்து மார்ச் 19 ஆம் தேதிக்குள் பொது சின்னம் ஒதுக்க சட்டத்தில் இடமுள்ளதாக சுட்டிக்காட்டினர். இதேபோல பொது சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கிலும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐ.ஜே.கே. சார்பில் ஆட்டோ ரிக்ஷா அல்லது தாங்கள் அளித்த 15-ல் ஒரு பொது சின்னத்தத்தை ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.