கு.க.செல்வம் நீக்கம் வழக்கு : ஸ்டாலின், துரைமுருகனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
திமுகவிலிருந்து கு.க.செல்வத்தை நீக்கம் செய்தது தொடர்பாக அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கு.க.செல்வம். இவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த நிலையில், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரிடம் கட்சி தரப்பிலிருந்து விளக்கமும் கேட்கப்பட்டது. ஆனால் கு.க.செல்வம் அளித்த பதிலில் திருப்தியில்லாததால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இதை எதிர்த்து கு.க.செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் “கட்சி சட்டதிட்டத்தின்படி, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; தலைவருக்கு இல்லை. எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்” என கு.க. செல்வம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்க கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.