துரைமுருகனை சாடிய பிரேமலதா - திமுக பதிலடி

துரைமுருகனை சாடிய பிரேமலதா - திமுக பதிலடி
துரைமுருகனை சாடிய பிரேமலதா - திமுக பதிலடி

பிரேமலதா திமுக பொருளாளர் துரைமுருகனை கடுமையாக சாடியதற்கு தேமுதிகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த சந்திரக்குமார் பதில் கொடுத்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “நேற்று துரைமுருகன் பேசியதை முற்றிலும் உளறலாகத்தான் பார்க்கிறேன். அதுதான் உண்மை. அவர் என்ன சொல்கிறார். முதலில் அவர்கள் இரண்டு பேரும் யார் என்றே தெரியாது என்கிறார். பின்னர் வந்து கூட்டணி பேசினார்கள் என்று கூறுகிறார். யாரென்று தெரியாதவர்களை துரைமுருகன் வீட்டிற்கு உள்ளே விட்டுவிடுவாரா? வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்வளவு கீழ்தரமான அரசியல் பண்ணுவாங்களான்னு துரைமுருகனை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இதை ஒரு வெட்கக்கேடாக கருதுகிறேன். அவர் பேசின பேச்சு முரண்பாடானது. துரைமுருகன் உட்காந்திருக்கும் இடத்திலேயே தூங்குவார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். தூக்கத்தில் பேசினாரா என்று தெரியவில்லை. வயதின் மூப்பின் காரணமாக துரைமுருகன் தூக்கத்தில் பேசினாரா என சந்தேகம் உள்ளது” எனக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், பிரேமலதா பேச்சுக்கு தேமுதிகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த சந்திரக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சந்திரக்குமார் கூறுகையில், “பிரேமலதா பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தியுள்ளார். கருணாநிதியை மருத்துவமனையில் வந்து பார்க்க வேண்டும் என்று இவர்கள் கேட்கவே இல்லை. ஆனால் பச்சை பொய்யை சொல்கிறார்கள். அன்று நேரில் வந்து பார்க்க கூடிய வகையில் கேப்டனின் உடல்நிலை இல்லை. பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதன்மூலம் மோசமான கீழ்தரமான அரசியல்வாதியாக பிரேமலதா மாறியுள்ளார் என்பதை காட்டுகிறது.

துரைமுருகனை தனிப்பட்ட முறையில் சந்தித்தோம் என திரும்ப திரும்ப ஒரே பொய்யை கூறி வருகின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அவர்களை பார்த்துவிட்டார்கள் என்பதற்காக நாங்கள் போய் பேசுவோமா? நான் என்ன முட்டாளா? என கேட்டு வருகின்றனர். நீங்கள் முட்டாள் கிடையாது. தமிழக மக்களை நீங்கள் முட்டாளாக பார்க்கிறீர்கள். எங்கள் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தேமுதிகவின் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரின் யோக்கியதை இதுதான் என அடித்து நொறுக்கி நிரூபித்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தேமுதிக நிர்வாகிகள் தங்களிடம் கூட்டணி குறித்து பேச வந்ததாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். ஆனால் தனிப்பட்ட முறையில் துரைமுருகனை சந்தித்ததாகவும் கூட்டணி பேச செல்லவில்லை எனவும் தேமுதிக நிர்வாகிகளும், சுதீஷும் தெரிவித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com