வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு பாஜக மற்றும் அதிமுக அரசுகள் துரோகம் இழைத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் கொடுஞ்செயல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல மடங்கு பெருகி விட்டது வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெற நடைபெற்ற தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டார்கள் என்றும், கோவை, சென்னை உள்ளிட்ட ரயில்வே அலுவலகங்களிலும் இந்த அநீதி தமிழக இளைஞர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், புதிய பணியிடங்கள் எல்லாம் வடமாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டது போன்ற அவல நிலைமையை பாஜக அரசு திட்டமிட்டு உருவாக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை சென்று, தமிழக இளைஞர்களை வஞ்சித்திருப்பதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.