முதலமைச்சரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு: சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ்
சசிகலாவிடம் நான்கு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தாமரைக்கனி மகன் ஆணழகன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்து நான்கு அமைச்சர்கள் ஆலோசனை பெற்றதாக புகார் தெரிவித்திருந்தார்.
அந்த அமைச்சர்களை முதலமைச்சர் கண்டிக்கவில்லை எனவும் எனவே அந்த அமைச்சர்கள் நான்கு பேர் மற்றும் முதலமைச்சர் ஆகிய ஐந்து பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை சபாநாயகர் தனபாலுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காத நிலையில், செப்டர்பர் 3ஆம் தேதிக்குள் சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என இன்று நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.