“அமமுகவுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேச்சையாகவே கருதுவதாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் கூறப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இதுதொடர்பான வழக்கில் குக்கர் சின்னம் வழங்க ஏற்கனவே நீதிபதி கன்வில்கர் கூறியிருந்தபோது அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் குக்கர் சின்னம் கிடைக்கும் எனக் காத்திருந்ததாக வாதாடினார்.
இதனையடுத்து, குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் எங்கே எனத் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், ஆவணங்கள் இல்லை எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆவணங்கள் கூட தயார் செய்யாமல் இருப்பது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். இதனையடுத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அவர்கள் நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்கூறி ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொதுச் சின்னத்தை வழங்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.