
போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ 6 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பேருந்து கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை. காலத்தின் நிலையை கருதி, எரிபொருள் உள்ளிட்டவைகளின் விலையை மனதில் கொண்டு நியாயமான முறையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதில் தவறில்லை” என தெரிவித்துள்ளார்.
ஆனால் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “மற்ற மாநிலங்களுடன் பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் அரசு, தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாதது ஏன்? எந்தவித முன் அறிவிப்புமின்றி பேருந்து கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டுகிறது அரசு. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உயர்வு செய்தபோது அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படவில்லையா?. போக்குவரத்துதுறை அமைச்சர் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறுகிறார். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம், அதற்கு முன், அரசு கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும்” என கூறினார்.