சீர்காழியில் 3 கிராம் நகைக்காக பெண்மீது கொடூர தாக்குதல்... மர்ம நபருக்கு போலீஸ் வலை
சீர்காழி அருகே 3 கிராம் நகைக்காக வீட்டில் இருந்த பெண் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் கயிலாசநாதர் நகரை சேர்ந்த முத்துகுமரன் மனைவி வளர்மதி 58. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியே வசித்து வருகிறார்.
இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுவதால் அருகில் கூரைவீடு அமைத்து வசித்து வந்தனர். நேற்று இரவு குடிசை வீட்டுக்கு விளக்கேற்ற சென்ற வளர்மதி காலை வரை வீட்டிற்கு வரவில்லை .இதனையடுத்து அவரது மகள் தேடி சென்ற பார்த்தபோது குடிசை வீட்டின் பின்புறம் தலையில் பலத்த காயத்துடன் சுயநினைவின்றி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
அப்போதுதான் இரவு விளக்கேற்றச் சென்ற வளர்மதியை மர்மநபர் கொடூரமாக தாக்கி கொல்லை புறத்திற்கு இழுத்துச் சென்று அவர் அணிந்திருந்த 3 கிராம் தோடு, மூக்குத்தியை அறுத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் வளர்மதிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளார்.
3 கிராம் நகைக்காக பெண் கொடூரமாக தாக்கபட்ட சம்பவம் சீர்காழி பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்து. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.