தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது செயல்பட தொடங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் 180 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு தூண்கள் அமைக்கும் பணியை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது ‘நடைமுறை சிக்கல்களுக்கு ஏற்ப ஜி.எஸ்.டி வரியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும். தமிழக தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா பெரும் சவாலாக இருக்கும் என்பதாலேயே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பாரதிய ஜனதாவை விமர்சிக்கிறார். அதிமுகவை மட்டுமல்ல திமுகவையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசியல் ரீதியாக பாஜக ஆட்டிவைக்கும். தவிர ஆட்சி ரீதியாக அல்ல. தமிழக அரசு தற்போது தான் செயல்படத் தொடங்கியுள்ளது. எந்த அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை.கோடநாடு சம்பவம் குறித்து தனிக்குழு அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இதில் தொடர்ச்சியாக சந்தேகங்கள் எழுவது அரசுக்கு நல்லதல்ல’ என்றார்.