உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எப்போதும் அத்தியாவசியமான ஒன்றுதான். ஆனால் அதனை அளவுக்கு மீறி செய்தால் உயிரே போகும் அபாயத்திற்கே வித்திடும். உடற்பயிற்சி செய்யும் போது கை கால்களில் வலி ஏற்படுவது, ஆங்காங்கே சிறிய காயங்கள் ஏற்படுவது சாதாரண விஷயமாக பார்க்கப்பட்டாலும், எல்லா சமயத்திலும் அந்த காயங்கள் சாதாரணமானதாக இருந்திடாது. அப்படி கடுமையாக உடற்பயிற்சி செய்ததன் விளைவாக ஆஸ்திரேலிய நபரின் முழங்கை பறிபோனதோடு உயிருக்கே அச்சுறுத்தலாகியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டை சேர்ந்தவர் கேப்ரியல் மெக்கென்னா லீஷ்கே. இவர் தனது பைசெப்ஸ் கர்ல்ஸ்-க்காக 50 கிலோ எடைகொண்ட டம்பல்ஸை தூக்கிய போது கேப்ரியலின் வலது கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வலியுடன் துடித்தவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவரது கையை முறையாக பொருத்துவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இருப்பினும் அறுவை சிகிச்சை செய்த பிறகு சாதாரண அளவை விட மூன்று மடங்கு அதிகமாகவே கேப்ரியலின் கைது வீக்கமடைந்திருக்கிறது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வெறும் 29 வயதே ஆன கேப்ரியல் மெக்கன்னாவின் நிலை மோசமடைந்ததோடு பத்து நாட்கள் கோமா நிலைக்கும் சென்றிருக்கிறார்.
தி சன் ஆங்கில ஏட்டின் செய்திப்படி, இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்திருக்கிறது. கோமா நிலையில் இருந்து நினைவு திரும்பிய போது தனது பாதி கை இல்லாமல் இருந்ததை கண்டு பதறிப்போயிருக்கிறார். அதன் பிறகு கேப்ரியலிடம் பாக்டீரியல் தொற்று காரணமாக அவரது கை அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பைசெப்ஸ் செய்யும் போது ஏற்பட்ட படுகாயத்தை சரிசெய்ய மேற்கொள்ள அறுவை சிகிச்சைக்கு பிறகு தொற்றை தடுப்பதற்கான உரிய ஆண்ட்டி பயோடிக்ஸ் கொடுக்கப்படாததால் சதைகளை உண்ணும் பாக்ட்டீரியா தொற்று ஏற்பட்டு மாசுபடுத்தியிருப்பதாகவும் கேப்ரியலிடம் கூறப்பட்டிருக்கிறது.
நெக்ட்ரோடைசிங் ஃபசைட்டிஸ் என்ற பாக்ட்டீரியா தொற்று ஏற்பட்டு அவரது உயிருக்கே ஆபத்து விளைவுக்கூடியதாக இருந்ததல் கையை அகற்றியிருப்பதாகவும் எந்த மோசமான நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள் என கேப்ரியலின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தி சன் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இத்தனை பெரிய அபாயங்களையும் கடந்து உறுதித் தன்மையுடன் மீண்டும் தனது உடலை திடப்படுத்திக்கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஏனெனில் 2024ல் பாரிஸில் நடைபெற இருக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று லட்சியத்தோடு கேப்ரியல் இருக்கிறாராம்.
ஆஸ்திரேலியாவின் டிராக் சைக்கிளிங் குழுவுக்காக பங்கேற்கும் முனைப்புடன் கேப்ரியல் மெக்கன்னே பயிற்சி பெற்று வருகிறார் என்றும், அதற்காக தன்னுடைய கையில் செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக GoFundMe என்ற பக்கத்தையும் தொடங்கி சாதனங்கள் வாங்கவும், தெரப்பி செய்துக்கொள்ளவும் மக்களின் உதவியை நாடியிருக்கிறார்.
இதனிடையே தன்னம்பிக்கையுடன் சைக்கிளிங் செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற கேப்ரியலின் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.