சுண்டைக்காய் பறிப்பதில் பிரச்னை - தற்கொலையில் முடிந்த அடிதடி தகராறு
கள்ளக்குறிச்சியில் சுண்டைக்காய் பிரச்சனைக்கு தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி ராஜா நகர் சிறுவர் பூங்கா பின்புறம் உள்ள பகுதியில் வசித்து வருபவர் சுமைதூக்கும் தொழிலாளி சுரேஷ். இவரது மகள் சினேகா, நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் கரையில் இருந்த சுண்டைக்காய் செடியில் காய்த்துள்ள சுண்டைக்காயை பறித்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் கொளஞ்சி என்பவர் சினேகாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் சினேகாவையும் அவரது தம்பியையும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து அங்குவந்த சினேகாவின் தந்தை சுரேஷ் மற்றம் தாய் சுமதியும் கொளஞ்சியிடம், பொது இடத்தில் உள்ள செடியில் காய்த்த சுண்டக்காயை பறித்ததற்கு ஏன் எனது பிள்ளைகளை அடித்தாய் என கேட்டதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் போது ஆத்திரமடைந்த கொளஞ்சியும், அவரது மகன் வேலுவும் சுரேஷின் குடும்பத்தினரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியவாறே கையில் உள்ள இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்குவந்த சுரேஷின் சகலை சீத்தாராமன் சண்டையை விலக்கச் சென்றுள்ளார். அவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமுற்ற சுரேஷின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அவமானத்தால் மனமுடைந்த சுரேஷ் நேற்று மாலை வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு சென்றார்.
பின்பு மது அருந்தி விட்டு வீட்டிற்குச் சென்றவர் அதிக மன உளைச்சலுக்கு உள்ளானதால் அங்கு இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த பின் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.