பட்ஜெட்டின் விளைவுகளை நாடு விரைவில் சந்திக்க நேரிடும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை
மத்திய பட்ஜெட் பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், “மிகவும் மோசமான அம்சங்களைக் கொண்ட பட்ஜெட் அறிக்கை இது. தோல்வியடைந்த அரசு என்பதை இந்த பட்ஜெட் அறிவிப்பின் மூலம் நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிரூபித்து உள்ளார்” என்றார்.
விவசாயிகளின் வருமானம் உயரும் என இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கும் போது இது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் விவசாய நிபுணர் இல்லை. எனினும் ஒரு விஷயத்தை பார்க்கலாம். 2022 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு செயல்படுவதாக கூறினர். 2014 ஆம் ஆண்டு இதற்கான உறுதியை கொடுத்தனர். இப்போது 2018 ஆக ஆகிறது. விவசாயிகளின் வருமானம் அப்படியே உள்ளது. ஏற்கனவே நான்கு ஆண்டுகளில் சாதிக்க முடியவில்லை. அடுத்த 4 ஆண்டுகளில் எதை சாதிக்கப் போகிறார்கள்?” என்றார்.
மேலும், கடந்த நிதியாண்டில் 3.25 இருந்த நிதிப்பற்றாக்குறை இந்த ஆண்டு 3.5 சதவீதம் ஆக அதிகரித்து உள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பால் இந்தியா விரைவில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ப.சிதம்பரம் கூறினார். பாஜக அரசு வெளியிடும் முழுமையான கடைசி பட்ஜெட் இது என்பது என்று குறிப்பிட்ட அவர், கடவுளுக்கு நன்றி என்று அவர் கிண்டல் செய்தார்.