“என் மகளை பாஜகவினர் மிரட்டுகிறார்கள்” - மோடிக்கு பாலிவுட் இயக்குநர் ட்விட்
தனது மகளை பாஜக தொண்டர்கள் மிரட்டுவதாக பாலிவுட் இயக்குநர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 542 தொகுதிகளில் 303 தொகுதிகளில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல திரைப்பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்து பரவலான கவனம் ஈர்த்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், மோடிக்கு தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்கூட மோடிக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
“டியர் மோடி சார், உங்களது வெற்றிக்கு எனது வாழ்த்துகள், ஆனால் உங்களின் எதிர்ப்பாளனாகிய எனது மகளை உங்களது தொண்டர்கள் வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற நோக்கத்தில் மிரட்டியுள்ளனர். தயவு செய்து இப்படிப்பட்ட உங்களது தொண்டர்களை எப்படி சமாளிப்பது எனச் சொல்லி கொடுங்கள் என்று கூறியிருந்தார். அத்துடன் பாஜக தொண்டர் தனது மகளை மிரட்டும் தொனியில் பதிவிட்டிருந்த புகைபடத்தையும் கூடவே இணைத்திருந்தார்.
இந்த ட்விட்டிற்கு ‘தி ஆக்சிடெண்டல் பிரைம்மினிஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், சமூக ஆர்வலரும் ஆன இயக்குனர் அசோக் பண்டிட் பதிலளித்துள்ளார். அதில் அவர் இந்தச் செய்தி போலியானது. நாடே மோடியின் வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் மோடியின் மீது அவதூறு ஏற்படுத்துவதற்காக ‘அர்பன் நக்ஸல்ஸ்’ போட்டோ ஷாப் மூலம் இதை செய்துள்ளனர். எனக்கு இதே போல் சூழ்நிலை அமைந்தபோது நான் காவல்துறையில் புகார் கொடுத்தேன்.இது கண்டனத்திற்குரியது மற்றும் கட்டுப்படுத்தவேண்டியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த அனுராக், “இந்த மிரட்டல் இன்ஸ்டாகிராமில் உள்ளது. ஆகவே ட்விட்டரில் தேடுவதை நிறுத்தி விட்டு, நீங்கள் தயவு செய்து இன்ஸ்டாகிராமில் தேடுங்கள்” என்றார். அதையொட்டி இந்த விவாதம் வலுத்தது. இதற்குப் பதிலளித்த அசோக் பண்டிட், “நான் உங்களை போலீசில் புகார் செய்யுங்கள் எனக் கூறியதை படிக்க வில்லையா? இதற்கு பிரதமர் என்ன செய்யமுடியும்? இது மட்டுமல்லாமல் இதை கவனிக்கதான் தனித்தனியான துறைகள் இருக்கிறேதே?” என விளக்கியுள்ளார். மேலும் மோடியின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத அனுராக் குடிபோதையில் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

