உரிய ஆவணமின்றி 500 கோடிக்கு மேல் பறிமுதல்: முதலிடத்தில் தமிழகம்
தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததிலிருந்து நேற்று வரை நாடு முழுவதும் உரிய ஆவணம் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சோதனைகளில் பிடிபட்டவை குறித்து மார்ச் 25 ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் மாநில வாரியான இந்தப் புள்ளிவிவரத்தில், தமிழகத்தில்தான் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் அதிக அளவில் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிகத்தில் 107 கோடியே 24 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இடத்தில் உத்தரப்பிரசேதம் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 104 கோடியே 53 லட்சம் ரூபாய் ஆவணமில்லாத பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 103 கோடி ரூபாய் மதிப்புடன் ஆந்திரா 3 ஆவது இடத்திலும், 92 கோடியே 80 லட்சம்ரூபாய் மதிப்புடன் பஞ்சாப் 4 ஆவது இடத்திலும் இருக்கிறது.
கர்நாடகத்தில் 26 கோடியே 53 லட்சம் ரூபாயும், மகராஷ்ட்ராவில் 19 கோடியே 11 லட்சம் ரூபாயும், தெலங்கானாவில் 8 கோடிய 20 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை 143 கோடியே 37 லட்சம் ரூபாய் ரொக்கமும், 89 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும், 131 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும், 162 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 12 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசப்பொருட்களும் என 539 கோடியே 992 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.