ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
இந்நிலையில் மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில், “நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.
எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்” என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.