அதிமுக உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய, மாநில கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
அதேபோல அதிமுக - பாஜக இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா கூட்டணி குறித்து அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று சென்னை வருகிறார். வரும் 22-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக அமித் ஷா ராமேஸ்வரம் வர உள்ள நிலையில், முன்கூட்டியே இன்று சென்னை வருகிறார். அமித்ஷாவோடு தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயலும் உடன் இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிமுகவின் முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.