வெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்
கோவாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் வெளிநாடு சென்றுள்ளனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் கோவா அரசியல் வானிலையில் சற்றே மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கோவா சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. 16 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் வசம் இருந்தாலும், 14 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்திருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்தது. மஹாராஷ்ட்ரவாடி கோமண்டக் கட்சி, கோவா முன்னோக்கு கட்சி, சுயேட்சை ஆகியவை தலா 3 எம்.எல்.ஏக்களுடன் பாஜக ஆட்சியில் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேரும் ஒன்றாக ஆளுநர் மாளிக்கைக்கு என்று ஆட்சி அமைக்க கோரும் கடிதத்தை கடந்த செப்டம்பர் 17ம் தேதி அளித்தனர். ஆட்சி அமைக்க வலியுறுத்தியும் ஆளுநர் மிரிதுலா சின்ஹா இதுவரை அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. ஒருவேளை ஆளுநர் அழைப்பு விடுத்தால், காங்கிரஸ் கட்சி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அதனால், காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களை பிரித்து தன் பக்கம் இழுக்கும் முயற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜக பக்கம் செல்ல உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதனிடையே, தங்கள் வசம் 21 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை நடத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 19ம் தேதி(புதன்) அதிரடியாக கூறியது. மனோகர் பாரிக்கர் மட்டுமல்லாமல் கோவா பாஜகவின் இரண்டு மூத்த அமைச்சர்களும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றனர். பிரான்சிஸ் டி’சௌஸா மற்றும் பந்துரங் மத்கைகர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையும் காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இதனால், கோவா அரசியல் சூழல் தற்போது பரபரப்பான கட்டத்தில் உள்ளனர்.
இதனையடுத்து, தேசிய செயலாளர் ராம் லால், கோவா பாஜக தலைவர் விஜய் டெண்டுல்கர் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் உள்ளிட்ட பாஜக தலைவர் குழு கடந்த வாரம் டெல்லியில் பயணம் மேற்கொண்டனர். இந்தக் கடந்த புதன்கிழமை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தனர். கோவாவின் தற்போதையை அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்தனர். இதனையடுத்து அடுத்த மூன்று தினங்களில் துணை முதலமைச்சர் பதவி உருவாக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மூத்த அமைச்சர்களுக்கு அந்தப் பொறுப்பை அளிக்க வேண்டும் எனக் கூட்டணி கட்சியான மஹாராஷ்ட்ரவாடி கோமண்டக் கட்சி கடந்த வாரம் வலியுறுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் சீனா மற்றும் ஐரோப்பியாவுக்கு சென்றுள்ளனர். எம்.எல்.ஏக்களான ஜெனிஃபெர் மோன்செர்ரேட் மற்றும் பிலிப் நேரி ரோட்ரிக்யூஸ் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மோன்செர்ரேட் மற்றும் ரோட்ரிக்யூஸ் கட்சிக்கு தெரிந்தே வெளிநாடு சென்றுள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. தேவையான நேரத்தில் அந்த எம்.எல்.ஏக்கள் நாடு திரும்பிவிடுவார்கள் என்று கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதன்கர் கூறுகிறார்.