இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு
4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி விருப்பமனு பெறலாம் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு நிலுவையில் இருந்ததால் திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர், சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்தார். அதனால், காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
காலியாக உள்ள தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பிரதான கட்சிகள் இடைத்தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.25 ஆயிரத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அங்கே தேர்தல் பணிகளை மேற்கொள்ளவுள்ள பொறுப்பாளர்களையும் அக்கட்சி இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.