முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம்... முட்டி மோதும் அணிகள்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம்... முட்டி மோதும் அணிகள்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம்... முட்டி மோதும் அணிகள்
Published on

28 ஆண்டுகளுக்கு பிறகு முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை பெற ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியும், தினகரன் அணியும் முயன்று வருகின்றன. இரட்டை இலை மற்றும் கட்சியின் பெயர் யாருக்கு என்பதற்கான இறுதி விசாரணை இன்று நடைபெற உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி பொறுப்பேற்றார் சசிகலா. அவரது நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று கூறி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி ஜனவரி 7 ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். பிப்ரவரி 7-ல் அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியுமாக பிளவுபட்டது.

மார்ச் 12ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். மார்ச் 16ஆம் தேதி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தா‌ர். மார்ச் 23ஆம் தேதி அதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

ஏப்ரல் 9ஆம் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் 26ஆம் தேதி, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். ஜூன் 2 ஆம் தேதி டிடிவி தினகரன் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்டு 17ஆம் தேதி ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. ஆகஸ்டு 29ஆம் தேதி, இரட்டை இலை தொடர்பாக தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு மனு அளித்தது.

இரு அணிகள் இணைந்தபின், செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்பது என்பது முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட‌து. செப்டம்பர் 14ஆம் தேதி, இரட்டை இலைச்சின்ன வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இரு அணிகள் தரப்பில் பிரமாண பத்திரங்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதோடு, அவகாசம் கேட்பதாகவும் தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது. செப்டம்பர் 15ஆம் தேதி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 15ஆம் தேதி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 31க்குள் தேர்தல் ஆணையம் முடிவெ‌டுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக, மனு தாக்கல் செய்ய கடந்த மாதம் 29ஆம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், அக்டோபர் 6ஆம் தேதி சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 29ஆம் தேதி, ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி சார்பில் ஒரு டெம்போ வேன் நிறைய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 2,140 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல, தினகரன் தரப்பில் ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜெ.தீபா சார்பில் 1,250 பேரின் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து இன்று இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com