“புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்” - அதிமுகவில் மல்லுக்கட்டும் மைத்ரேயன்

“புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்” - அதிமுகவில் மல்லுக்கட்டும் மைத்ரேயன்
“புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்” - அதிமுகவில் மல்லுக்கட்டும் மைத்ரேயன்

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக செயல்பட்ட போது, ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டவர் மைத்ரேயன். இரு அணிகள் இணைந்த பின்னர், ‘அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை’ என்று அவர் தனது முகநூலில் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதாவது, ஓபிஎஸ் அணியில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று அவர் மறைமுகமாக கூறியிருந்தார். அதற்கேற்றார்போல், அன்றைய நிலையும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே முழுவதும் சமரசம் ஏற்படவில்லை என்பதுபோல் தான் இருந்தது. தொடர்ந்து மைத்ரேயன் ஒதுங்கிய நிலையிலேயே இருந்தார்.

இந்த நிலையில்தான், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குழுக்களில் தான் இடம்பெறாதது தொடர்பாக எம்.பி மைத்ரேயன் சமீபத்தில் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. 

ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை. கழகத்தில் நான் 1999ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை சேர்த்து இருந்தார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

அதேபோல், ‘ராணுவ சவப்பெட்டி ஊழலை போல் ரஃபேல் ஊழலும் காணாமல் போகும்’ என்ற எழுதிய கட்டுரையை இணைத்து ஒரு கருத்தினை பதிவிட்டு இருந்தார். அதில், “இன்றைய இந்து தமிழ் நாளிதழில் வெளியான எனது பேட்டி. இதில் நான் கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் யதார்த்தத்தின் வெளிப்பாடே. நான் பாஜகவுக்கு திரும்ப சென்று விடுவேனோ என்று சிலர் நினைக்கிறார்கள், சிலர் விரும்புகிறார்கள். அது மட்டும் நிச்சயம் நடக்காது. நான் என்றும் அம்மா விசுவாசி” என்று மைத்ரேயன் முகநூலில் குறிப்பிட்டு இருந்தார். 

இதுஒருபுறம் இருக்க சில தினங்களுக்கு முன்பு மோடியின் படத்தை பதிவிட்டு, சவுக்கிதார் ஆர்மியில் இணைந்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். சவுக்கிதாரில் பாஜக தலைவர்கள் இணைந்து வரும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முதல் தலைவராக மைத்ரேயன் இணைந்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்படி வெளிப்படையாக செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அந்த வகையில், மைத்ரேயன் இன்று தனது முகநூல் பக்கத்தில், “இன்று வீட்டில் அம்பாரமாக குவிந்துள்ள புத்தகங்கள், பத்திரிகை குறிப்புகளை சரி செய்து அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பழைய இதழில் கவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதை வரிகளைப் படிக்க நேர்ந்தது. 

“என் கால்களில் சற்று வலி ஏற்படும் போது நான் சிறிது இளைப்பாறுகிறேன்.

நான் இளைப்பாறுவது ஓய்வெடுப்பதற்குத் தானே ஒழிய ஓய்ந்து போவதற்கு அல்ல." 

" காத்திருக்கும் வரை நம் பெயர் காற்று என்றே இருக்கட்டும். 

புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்”. 

எவ்வளவு பொருள் பொதிந்த யதார்த்தமான வரிகள் !”  என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் பதிவின் மூலம் தான் தற்போது காத்திருப்பது போலவும், பின்னர் முக்கியமான முடிவினை எடுக்க உள்ளதையும் வெளிப்படுத்துவது போல் உள்ளது. மைத்ரேயனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பொறுப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், அவருடைய இந்தப் பதிவு யோசிக்க வைக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com