அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களின் போராட்டங்களில் அடக்குமுறையை கையாளும் அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் தங்களது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திவரும் தொடர் போராட்டத்தை காவல்துறை மூலம் அடக்கி விடலாம் என தமிழக அரசு நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும், தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடுமென்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிரட்டியிருப்பது வேதனைக்குரியது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலவரையற்ற போராட்டத்தை நடத்தும் நிலைக்கு அரசு ஊழியர்களை தள்ளாமல், ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற போராட்டங்களை கையாளும் தகுதியோ திறமையோ இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் வீட்டுக்கு செல்வதே தமிழகத்திற்கு நல்லது என்றும் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுடன் இணைந்து அதிமுக அரசை ஜனநாயக ரீதியில் வீழ்த்தி அரசு ஊழியர்களையும் தமிழக மக்களையும் காப்பாற்றும் பணியில் திமுக தீவிர கவனம் செலுத்தும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.