ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தினகரன் மனு தள்ளுபடி
அதிமுகவின் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தினகரன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
அதிமுகவின் கட்சி பெயர் மற்றும் சின்னம் விவகாரத்தில் கடந்த 29ஆம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து அதிமுக பெயர் மற்றும் சின்னம் குறித்த விசாரணை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க உத்தரவிடக் கோரிய தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

