“சிடிஎஸ் நிறுவனம் அதிமுக அரசுக்கு 26 கோடி ரூபாய் லஞ்சம்” - ஸ்டாலின் புகார்

“சிடிஎஸ் நிறுவனம் அதிமுக அரசுக்கு 26 கோடி ரூபாய் லஞ்சம்” - ஸ்டாலின் புகார்

“சிடிஎஸ் நிறுவனம் அதிமுக அரசுக்கு 26 கோடி ரூபாய் லஞ்சம்” - ஸ்டாலின் புகார்
Published on

சிடிஎஸ் நிறுவனத்திடம் அதிமுக அரசு ரூ. 26 கோடி லஞ்சம் பெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள காக்னைசன்ட் அன்ட் டெக்னாலஜி எனும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் ‘KITS கேம்பஸ்’ கட்டிடம் கட்டுவதற்கும் சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ. 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது உலக அரங்கில் அழிக்க முடியாத பெரும் அவமானத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்தி இருக்கிறது. கட்டிட அனுமதி பெறுவதற்காக, அதிமுக அரசில் உள்ள அதிகாரிகளுக்கும் அந்நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் வீடியோ கான்பிரன்ஸ் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அந்தத் தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டு விட்டது. அதனடிப்படையில் காக்னைசன்ட் டெக்னாலஜி நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 அதிமுக அரசின் இந்த ஊழல் 2012- 2016 ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றதாக வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் இந்த ஊழல் நடைபெற்றதாகக் கருத முடியாது. ஏனென்றால் அதிகாரிகளை பணம் வசூலிக்க சொல்லி உத்தரவிடுவது அதிமுக அமைச்சர்கள்தான் என்பது நாடறிந்த உண்மை. ஆகவே இந்த “26 கோடி ரூபாய் ஊழல்” விவகாரத்தில் அந்த 2012 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் பதவியில் இருந்த வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மின்துறை அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பி. தங்கமணி மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர்களாக இருந்த பி. வி. ரமணா, எம். சி. சம்பத், தோப்பூர் வெங்கடாசலம், கே. சி. கருப்பண்ணன் ஆகியோருக்கு  இந்த அமெரிக்கன் டாலரில் நடந்த ஊழலில் நிச்சயம் பெரும்பங்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

ஆகவே  தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, உடனடியாக ஊழல் வழக்கினைப் பதிவு செய்து, சிபிஐ மற்றும் இன்டர்போல் உதவியை நாடி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாமதமின்றிப் பெறவேண்டும். 

அந்த வழக்கில் தாக்கலாகியுள்ள  வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்களையும் பெற வேண்டும்.  ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் காக்னைசன்ட்  டெக்னாலஜி நிறுவனத்தின் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com