கமல்ஹாசன் மீது நமது எம்ஜிஆர் நாளிதழில் கடும் விமர்சனம்
தமிழக அரசு மீது தொடர்ந்து புகார்களை வைத்து வரும் நடிகர் கமல்ஹாசன் மீது அதிமுக அம்மா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சித்ரகுப்தன் எழுதியுள்ள கவிதையில், எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை, திமுகவின் தயவில் வன்மமான வார்த்தைகளால் வசைபாடித் திரிவதாக கமல்ஹாசன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்புச் சட்டை அணிந்து கொண்டு பெரியாரிஸ்ட் வேஷம் போடுவதாக கமல்ஹாசனை விமர்சித்துள்ள நமது எம்ஜிஆர் நாளிதழ், சேரி பிஹேவியர் என்பதில் தவறென்ன எனக்கேட்டு சாதிக்கு ஆலவட்டம் வீசுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் என தமிழர்களின் உரிமை சார்ந்த விஷயம் என்றால், கமல்ஹாசன் மவுனம் சாதிப்பது ஏன் என்றும் நமது எம்ஜிஆர் நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.