உரிய நேரத்தில் முடிவெடுப்போம்... அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை
தமிழக அரசியல் சூழலை கவனித்து, உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்போம் என அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசு செய்து வரும் வரம்பு மீறிய தலையீடுகள், தமிழகத்தில் நிலவும் குழப்பத்துக்குக் காரணம் என அறிவதாகக் கூறியுள்ளனர்.
தற்போது உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடிகளை தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் நலன் கருதி தங்களது அரசியல் நகர்வுகள் இருப்பதாகவும், அரசியல் சூழலை கவனித்து, தொண்டர்களின் கருத்துகளையும் உள்வாங்கி, உரிய நேரத்தில் முடிவெடுப்போம் என்றும் அவர்கள் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தனர்.