பேராசிரியை விவகாரத்தில் எந்தப் புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை: அன்பழகன்
பேராசிரியை விவகாரத்தில் முக்கிய புள்ளி எந்தப் புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்திருந்தது. அத்துடன் அவரை கைது செய்யக்கோரி மாணவர்களும், பெற்றோர்களும், மகளிர் அமைப்பினரும் கல்லூரி முன் கூடி முழக்கமிட்டனர்.
இதையடுத்து நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். அந்த விசாரணையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நடத்துவார் என்றும் ஆளுநர் அறிவித்தார்.
இந்நிலையில் பேராசிரியை விவகாரத்தில் முக்கிய புள்ளி மற்றும் வேறு எந்தப் புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். உண்மைத் தன்மையைக் கண்டறியவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு உத்தரவிடாமல், ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.