ஜெயலலிதா துணிச்சல்காரர்: பரப்புரையில் புகழ்ந்து தள்ளிய ஆ.ராசா
ஜெயலலிதா துணிச்சல்காரர் என திமுக எம்.பி ஆ.ராசா புகழாரம் சூட்டினார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரத்தை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா புஞ்சை புளியம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “ஒரு வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணிச்சல்காரர். அவர் இருந்தவரை தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை. உதய் மின் திட்டம் கொண்டுவரப்படவில்லை. தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாக செயல்பட்டவர் ஜெயலலிதா.
அதனால்தான் பிரதமராக இருந்த மோடி போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை நேரில் பார்த்தார். ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துகிறோம் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து மத்திய அரசின் காலடியில் கிடக்கும் அவல நிலை உள்ளது” என்றார்.