ஒருவர் வெட்டிக் கொலை, தடுக்க சென்றவரும் வெட்டுப்பட்டு மரணம் - மதுரை சம்பவம்
மதுரையில் முன்பகை காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலகாரன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று முருகன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வழிமறித்து தகராற்றில் ஈடுபட்ட அண்ணாத்துரை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகனைத் தலை, கழுத்து, வயிறு, கை, கால் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் போது, தடுக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரரான அழகப்பன் (55) என்பவருக்கும் கழுத்தில் வெட்டு விழுந்து, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலூர் அரசு மருத்துவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் தப்பியோடிய அண்ணாத்துரையைத் தேடிவருகின்றனர்.