
தனது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இலவச மருத்துவ முகாமை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
கமல்ஹாசன் தனது 63-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக செயலி ஒன்றினை தொடங்கிவைக்கிறார். பள்ளிக்கரணையில் மழைப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு குறைகளை கேட்டறிகிறார்.
இந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இலவச மருத்துவ முகாமை ஆவடியில் கமல் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், “மருத்துவ முகாம் நடத்துவதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை. மருத்துவ முகாம்களுக்காக அரசியலை பயன்படுத்திக் கொள்வோம். தேங்கிய மழைநீரை அரசு அகற்றிவருவதால் நாங்கள் மருத்துவ முகாமை நடத்துகிறோம். முடிந்தவரை உதவ வேண்டும் என்பதற்காக மருத்துவமுகாமை தொடங்கி வைக்கிறோம். மழைக்காலம் என்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மக்கள் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். எங்களுடைய பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எங்கள் முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கனவிலிருந்து தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின; காணும் கனவுகளை நிஜமாக மாற்ற நாங்கள் பாடுபடுவோம்” என்றார்.
இந்த மருத்துவ முகாம் தொடக்க விழாவில் கமலின் மகளும் நடிகையுமான அக்சரா ஹாசன் பங்கேற்றார்.