கோவையில் பதுக்கி வைத்திருந்த 600 கிலோ குட்கா பறிமுதல்... ராஜஸ்தானை சேர்ந்த மூவர் கைது
கோவையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை நகரில் அண்மைக்காலமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து கோவை மாநகரில் எங்கெங்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதில், 18 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 600 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதனை கடைகளில் விற்க திட்டமிட்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலராம், முல்லாராம், மற்றும் மகேந்திரா ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரில் இதுபோன்று வேறு எங்காவது வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டு குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.