ஆர்.கே.நகர் தேர்தலில் தொப்பி சின்னம் கேட்டு டிடிவி தினகரன் உள்பட 29 பேர் விண்ணம் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சுயேட்சைகள் உள்பட 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை கடைசிநாள். நாளை மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் உள்பட 29 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த போது டிடிவி தினகரனுக்கு தான் தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை ஒதுக்கி இருந்தது. ஆனால் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் தனக்கு தொப்பி சின்னத்தையே வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தை டிடிவி தினகரன் நாடினார். ஆனால் தேர்தல் ஆணையமே இதுகுறித்து முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். ஒரு சின்னத்தை 29 பேர் கோரியுள்ளதால் யாருக்கு தொப்பி சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது.